ஒரே நாளில் ரூ.225 கோடி இழப்பு… வெள்ளத்தால் மூழ்கிய ஐடி அலுவலகங்கள்- தத்தளிக்கும் பெங்களூர்..!!

பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன.

இதனால் அந்த ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூரில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. லேசான மழை பெய்தாலே இங்கு தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

முக்கியமாக நேற்று இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மிமீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மழை பெய்த சில நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. நேற்று நாள் முழுக்க அங்கு இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இன்னும் 4 நாட்களுக்கு விடாமல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் பெய்து வரும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பாலத்திலேயே பல்வேறு வாகனங்கள் சிக்கின. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கு டிராபிக் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கடும் மழை வெள்ளம் காரணமாக பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். ஆகஸ்ட் 30ம் தேதி அங்கு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரே நாளில் 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் சார்பாக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் மோசமான உட்கட்டமைப்பு காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கடிதத்தில கூறப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் ரோடு ஐடி நிறுவனங்கள் மட்டும் வருடத்திற்கு 22 பில்லியன் டாலர் வருமானம் பார்க்கிறது. பெங்களூரின் மொத்த வருமானத்தில் 32 சதவிகிதம் இங்கிருந்துதான் வருகிறது. அதோடு பெங்களூரின் மிகப்பெரிய வரி வருவாயும் இங்கிருந்துதான் வருகிறது. ஆனால் இங்கே கட்டமைப்பு வசதி சரி இல்லை. இதனால் இங்கே நிறுவனங்கள் செயல்படுவது கடினம் ஆகி உள்ளது. மழை பெய்தால் வெள்ளம் வருகிறது.

இதனால் ஊழியர்கள் இங்கே சரியாக வேலை பார்க்க முடியவில்லை. நிறுவனங்களின் செயல்திறன் குறைகிறது. ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததால் எங்களுக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 5 மணி நேரம் தாமதமாக வந்த ஊழியர்களால் எங்களுக்கு மோசமான இழப்பு. இதனால் மீண்டும் பணிக்கு வரும் ஊழியர்கள் சிக்கலில் மாட்டி உள்ளனர். பெங்களூரால் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவுட்டர் ரிங் ரோட்டின் நிலை தற்போது கைமீறி சென்றுள்ளது. இது பிரச்சனை போல மாறி உள்ளது. பெங்களூரில் பல சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாங்கள் பணி செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் மாற்று இடங்களை கொடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் நாங்கள் வெளியேற நேரிடும் என்று ஐடி நிறுவனங்கள் கூட்டாக அம்மாநில பாஜக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.