லோக்சபா தேர்தல் தேதி நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் – உடனே அமலாகும் நடத்தை விதி.!!

டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி என்பது நாளை மதியம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால் நாளை முதல் புதிய திட்டங்களை அமல்படுத்த முடியாது.

இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டம் என்றால் 273 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து 2014ம் ஆண்டை போல் பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமரானார். இந்நிலையில் தான் லோக்சபா எம்பிக்களின் பதவிக்காலம் என்பது ஜுன் மாதம் 16ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விரைவில் மீண்டும் லோக்சபா தேர்தல் நடத்தப்பபட உள்ளது.

லோக்சபா தேர்தலை அமைதியான முறையில் இந்தியா முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலங்கள் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு கடந்த 9 ம் தேதி தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தார். இந்திய தேர்தல் ஆணைத்தை பொறுத்தவரை ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ஆனால் பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்டவற்றால் 2 தேர்தல் ஆணையர்களும் இல்லாத நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருந்தார்.

இதனால் திட்டமிட்டப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த விவாதம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்பபடுகிறது. வழக்கமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்தி ஒரே நாளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். அதன்படி இன்று மதியத்துக்கு மேல் லோக்சபா தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதையடுத்து அரசின் புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் என்பது லோக்சபா தேர்தல் முடியும் வரை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.