செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் தண்ணீர்: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு- சுவாரசிய தகவல்கள் இதோ.!

சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள தென் துருவ பகுதியில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இதுபற்றிய பல சுவாரசிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தில் உள்ள தென்துருவ பகுதியில் பனிக்கட்டியின் மேற்பரப்பு குறைவதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று தெரிவித்தது.

ஆனால் அதனை விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதே நேரத்தில் விண்கலம் அளவிட்ட விசித்திரமான ரேடார் சமிக்ஞையினால், மூடுபனியின் கீழே உலந்த பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு செவ்வாயில் பனிப்படலத்தால் மூடப்பட்ட பகுதியை வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று அவர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் அர்னால்டு தெரிவித்ததாவது, ” செவ்வாய் கிரகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியான திரவ நீர் இருப்பதற்கான ஆதாரமாக புதிய நிலப்பரப்பு சான்றுகள், எங்களது கம்ப்யூட்டர் மாதிரி முடிவுகள், ரேடார் தரவுகள் உள்ளிட்டவை அமைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய ஷெபீல்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பட்சர் தெரிவித்ததாவது, “இந்த ஆய்வு இன்று செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளது என்பதற்கான சிறந்த தகவலை அளிக்கிறது, ஏனென்றால் பூமியில் உள்ள துணை பனிப்பாறை ஏரிகளை தேடும் போது நாம் தேடும் இரண்டு முக்கிய ஆதாரங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

“திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இருப்பினும், இதனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டு என்று அர்த்தம் கொள்ள முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆராய்ச்சி குறித்த கூடுதல் விவரங்கள் ‘நேச்சர் ஆஸ்ட்ரனாமி’ என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளன.