5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்… மிசோரம், சத்தீஸ்கரில் இன்று வேட்பு மனு தாக்கல்..!

இந்தாண்டுடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடடிவடையும் நிலையில், மொத்தம் 679 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதியும், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதியும், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதி மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், அக்.20ம் தேதி தான் கடைசி நாளாகும். வேட்புமனு மீதான பரிசீலினை வரும் 21ம் தேதி நடக்கிறது. இரு மாநிலங்களிலும் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 23ம் தேதி கடைசி நாளாகும்.

மிசோரத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் முதற்கட்டமாக நவம்பர் 7ம் தேதி 20 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மிசோரம் மாநில முதல்வராக உள்ளார். ஆளும் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று, சத்தீஸ்கரை பொறுத்த அளவில், தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.