இனி பேருந்துகளில் செல்ல இ-டிக்கெட் அறிமுகம் – அமைச்சர் சிவசங்கர் தகவல்.!!

இந்தாண்டு இறுதிக்குள் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

தமிழகத்தில் பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இ-டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜிபே உள்ளிட்ட முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக போக்குவரத்து கழகத்தில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, நகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிசிடிவி கேமரா மற்றும் அவரச அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட சுமார் 500 பேருந்துகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுபோன்று, போக்குவரத்துத்துறையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.