வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்தி வைப்பு…!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காலை கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அதிமுக ,திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே பேரூராட்சி வெள்ளலூர் தான். வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டில் அதிமுகவும், 6 வார்டில் திமுகவும், 1 வார்டில் சுயேச்சை வெற்றி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.