வங்கதேசத்துடனே இந்திய உறவு அடுத்த 25 ஆண்டுகளில் புதிய உச்சத்தைத் தொடும் – மோடி நம்பிக்கை..!

டெல்லி: இந்தியா- வங்கதேசத்தின் உறவு அடுத்த 25 ஆண்டுகளில் புதிய உச்சத்தைத் தொடும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களையும் அவருடன் வந்திருக்கும் அவரது தூதுக்குழுவினரையும் வரவேற்கிறேன். கடந்த ஆண்டு நாம் அனைவரும் இணைந்து வங்கதேசத்தின் 50-வது சுதந்திரதினத்தையும், தூதரக உறவுகளின் பொன்விழாவையும், வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடினோம்.

கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடிய நட்பு தினத்தையும் நாம் முதல் முதலாக கொண்டாடினோம். இன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவில் பங்குகொள்கிறார். மேலும் அடுத்த 25 ஆண்டுகளின் அமிர்தப் பெருவிழாவின் போது, இந்தியா – வங்கதேச இடையேயான உறவு புதிய உச்சத்தைத் தொடும் என்று நம்புகிறேன்.

பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தலைமையில், பங்களாதேஷ் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே ஒவ்வொரு துறையிலும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இன்று பங்களாதேஷ், இந்தியாவின் மிகப்பெரிய பங்குதாரராக மட்டுமின்றி பிராந்தியத்தின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும் விளங்குகிறது. நமது கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையயான உறவுகளின் நெருக்கமும் சீராக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் நானும் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், இருநாடுகளும் மேலும் இணைந்து செயல்படவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் முடியும். நமது இருதரப்பு வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்று, ஆசியாவிலேயே வங்கதேசத்தின் ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இந்த வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த, இருநாடுகளுக்கிடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்த விவாதங்களை விரைவில் தொடங்குவோம்.

நமது இளைய தலைமுறையினர் ஆர்வமாக இருக்கும் தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பருவநிலை மாற்றம் மற்றும் சுந்தரவனக் காடுகளை பாதுகாப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம். தற்போது அனைத்து வளரும் நாடுகளுக்கும் எரிசக்தி விலை உயர்வு சவாலாக உள்ளது. மைத்ரீ அனல் மின் நிலையத்தின் முதல் அலகு இன்று திறக்கப்படுவதால், இனி வங்கதேசத்துக்கு மிகக் குறைந்த விலையில் மின்சார விநியோகம் கிடைக்கும். இரு நாடுகளுக்கு இடையே மின் பரிமாற்றம் தொடர்பான பேச்சுக்கள் நல்ல பலன் அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.