டிரைவர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை,பணம் திருட்டு- கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). டிரைவர்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது ராமகிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 6½ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராமகிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

போத்தனூர் அருகே உள்ள கார்மல் நகரை சேர்ந்தவர் காணிக்கைமேரி ( 62). இவர் சிட்கோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 1¼ பவுன் மோதிரம், வெள்ளி செயின், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து காணிக்கை மேரி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறர்கள்.