கோவையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல் : டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் கால்கள் முறிவு ..!

கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார்.

இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தராபுரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. டிப்பர் லாரியை திண்டுகல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (27) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் குறிஞ்சி குளம் அருகே வந்த போது 2 லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது. மற்றொரு லாரி டிரைவர் மேகநாதன் மற்றும் கிளீனர் செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புறப்படுத்தினர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.