குடிபோதையில் முதல் மனைவியின் மகன் தந்தை மீது சரமாரி தாக்குதல்.!

கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வேட்டைகாரன் புதூர் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தைலப்பன் (வயது 88).

இவருக்கு துளசியம்மாள், லட்சுமி என்ற 2 மனைவிகள். முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது 2-வது மனைவி லட்சுமியும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். தைலப்பன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவரது முதல் மனைவியின் மகன் அன்பழகன் (41) என்பவர் அடிக்கடி குடிபோதையில் அங்கு வந்து தகராறில் ஈடுபடுவார். சம்பவத்தன்று தைலப்பன் வீட்டில் இருந்தார். அப்போது குடிபோதையில் அன்பழகன் வந்தார். வழக்கம் போல அவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் தைலப்பன் அவரை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.
தப்பி இதில் ஆத்திரம் அடைந்த அன்பழகன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து அன்பழகன் தப்பி சென்றார்.பலத்த காயம் அடைந்த தைலப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு வேட்டைகாரன் புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் இதுகுறித்து தைலப்பன் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அன்பழகனை தேடி வருகின்றனர்.