கடந்த 20 மாதங்களில் 561 கோயில்களில் குடமுழுக்கு- அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

சென்னை: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு, பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா புகழ்பெற்றதாகும்.

இந்த ஆண்டிற்கான மாசி கொடை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

நேற்று ( மார்ச் 5) நடைபெற்ற மாசி கொடை விழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்பி ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மேயர் மகேஷ் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்: தமிழ்நாட்டில் இதுவரை 30 மாவட்டங்களுக்கு மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற கோயில்கள் மற்றும் ஸ்கீம் கோயில்கள் உள்ளிட்ட 501 கோயில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திமுக பொறுப்பேற்று 20 மாதங்களில் 561 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.