திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து வந்தால் ஆன்மிகத்தை தேடுவர்- திமுக மீது மத்திய அமைச்சர் முருகன் சாடல்..!

ஊட்டி : ”திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து வந்தால் ஆன்மிகத்தை தேடுவர்,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பா.ஜ., சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மோடி ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளிப்பதால், வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது.

நீலகிரி தி.மு.க., எம்.பி., ராஜாவின் பேச்சு அநாகரிகமானது; மக்கள் கொந்தளித்துள்ளனர். அவரது அவதுாறு பேச்சை கண்டித்து நடந்த கடையடைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தி.மு.க., மற்றும் போலீசார் கடைகளை திறக்க சொல்லி மிரட்டல் விடுத்தும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தீபாவளி, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர், தேர்தல் சமயத்தில் திருத்தணிக்கு வந்து கையில் வேல் பிடித்தார். தேர்தல் முடிந்த பின் மீண்டும் மாறிவிட்டார். திராவிட இயக்கத்தினர் ஆபத்து வந்தால் ஆன்மிகத்தை தேடுவது வழக்கம்.

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்ற வேண்டும். ராகுல் பாதயாத்திரை முடிவதற்குள் காங்., கரைந்துவிடும். இவ்வாறு, முருகன் கூறினர்.