இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!!

விமர்சனங்களுக்கு எனது செயல் மூலமாக பதில் கொடுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்ற போதும் விமர்சனங்கள் வந்தன. விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டேன். மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம்” என்றார்.