திருமணமானதை மறைத்து கல்லூரி மாணவியை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொல்லை- வாலிபர் போக்ஸோவில் கைது..!

மேட்டுப்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 28). கூலி தொழிலாளி.

இந்த நிலையில் விஜய் வேலைக்கு சென்று வரும் போது வெள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அப்போது விஜய், கல்லூரி மாணவியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மாணவி கல்லூரி படிப்பை முடித்து விட்டு பெற்றோரின் சமதத்துடன் திருமணம் செய்து கொள்ளாம் என்று தெரிவித்துள்ளார்.ஆனால் விஜய் மாணவியிடம் திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவியும் மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் மாணவியை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார். அதன் பின்னர் மாணவி தாலியை மறைத்து கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார். திருமணத்திற்கு பின்னர் விஜய் மாணவியை அடிக்கடி சந்தித்து தனிமையில் பேசி வந்தார். அப்போது அவர் மாணவியிடம் நமக்கு திருமணமாகி விட்டது என கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி அவரிடம் இருந்து விலகி சென்றார். ஆனாலும் அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தொல்லை தாங்காமல் மாணவி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விஜய்யை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜய்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அந்த மாணவியும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் விஜய் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். 2 குழந்தைகளின் தந்தை மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.