புதுக்கோட்டையில் சாலையோரம் டீ குடித்து கொண்டு இருந்தவர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலி…

துக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் நமணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. இந்தப் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூரில் இருந்து ஓம்சக்தி கோவிலுக்கு பக்தர்கள் வேனில் வந்துள்ளனர். அதேபோல், சென்னை திருவள்ளூர் பகுதியில் இருந்து மற்றொரு வேனில் ஐயப்ப பக்தர்கள் வேனில் வந்துள்ளனர்.

திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்காக மற்றொரு காரில் ஐந்து பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு நமணசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள டீக்கடையில் நிறுத்தி விட்டு டீ சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்துள்ளது. இந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்கள் மீது அசுர வேகத்துடன் மோதியது. இதில் டீ குடித்துக் கொண்டு இருந்த பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் 19 பேர் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டதோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகாலையிலேயே நடைபெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.