வால்பாறை தாலுக்காவில் தொடரும் கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட நகர் பகுதிகளிலும், வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம், புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.