காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 90 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை : தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தபடுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கசபா போலீசார் புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிக்காடு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்திய போது அதில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜீப்பில் துரத்தி சென்று காரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ 1கோடியே 90 லட்சம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. விசாரணையில் அவர்கள் மலப்புரம் மாவட்டம், கருங்காபுரம் பகுதியை சேர்ந்த முகமது குட்டி ( வயது 41) அவரது நண்பர் மலப்புரம் புத்தனங்காடி பகுதியை சேர்ந்த முகமது நிஷார் (வயது 31) என்பதும் கோவையில் இருந்து மலப்புரத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முகமது நிஷார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஹவாலா வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது..