வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… இனி 60 கி மீ தூரத்திற்கு ஒரு சுங்கச் சாவடி தான்… – நிதின் கட்கரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!

சுங்க கட்டண வசூலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குறைவான தொலைவுக்கு அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் சுங்கக்கட்டண வசூலுக்கு முடிவு கட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சாலைப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண கண்காணிப்பு முறையை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு பொதுமக்கள் சுங்கச்சாவடியில் நிற்கத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜிபிஎஸ் இமேஜிங் மூலம் டோல் தொகை வசூலிக்கப்பட இருக்கிறது.

அதாவது, அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகனத்தில் இருந்து கட்டணம் வசூலிக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு தயாராகி வருகிறது. இதில், நீங்கள் டோல் பிளாசாவைக் கடந்தவுடன், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணத் தொகை பிடித்தம் செய்யப்படும். இதற்கான கொள்கையை அரசு விரைவில் வகுக்க உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 60 கி.மீட்டருக்கும் ஒரு சுங்கச்சாவடி இருக்கும். இடையில் காணப்படும் அனைத்து சுங்கச்சாவடிகளும் அடுத்த மூன்று மாதங்களில் அகற்றப்படும். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செயல்முறை முன்பை விட மிக எளிதாகவும், குறைந்த நேரத்தையும் எடுத்துக்கொள்ளும் வகையில் தொழில்நுட்பங்கள் மேம்படுப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.