தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு மன உளைச்சல் கொடுத்தார்- ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்.!!

மிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, தமிழகத்தில் திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் அவருக்கு ஒதுக்கப்படும் துறைகளில் தனக்கான பணிகளை சிறப்பாக செயல்படுத்தி பாராட்டு பெற்றவர் ககன்தீப் சிங் பேடி, சுனாமி, மழை, வெள்ளம் என அனைத்து காலத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வேளாண் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, கஜா புயல் உள்ளிட்ட முக்கிய இயற்கை சீற்றங்களில் சிறப்பாக களப்பணியாற்றி மக்களின் பாராட்டுகளை பெற்றவர். அப்படிப்பட்ட அதிகாரி மீது இதுவரை புகார் எதுவும் வெளியாக நிலையில் தனது கீழ் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியே புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மணீஸ் நரவனே நியமிக்கப்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது மணீஸ் நரவனே ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் மீது புகார் தெரிவித்துள்ளார். . இது தொடர்பாக அவர் தலைமைச் செயலாளருக்கு 2 பக்க புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவர் தெரிவித்துள்ள புகாரில், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பாக, இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நீ புத்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜய்ன் கோயிலுக்குச் செல்கிறாய் என்று கேட்டு க்கன் தீப் சிங் பேடி காயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தி, உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்தவர், இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் தனக்கும் பிரச்னையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சியின் கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்ததாகவும் விமர்சித்துள்ளார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கோருவதாக மணீஸ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இக்கட்டான நேரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா துணையாக இருந்து தன்னைத் தேற்றியதாகவும் கூறியுள்ளார்.

.