விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி – 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அனைத்தும் அங்குள்ள 11 அடி ஆழ செப்டிக் டேங்கில் உள்ளது. அதை 2 வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை செப்டிக் டேங்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்த தொழிலாளி மோகனசுந்தரலிங்கம் ( வயது 37) தலைமையில் ராமு ( வயது 21 )குணா ( வயது 20 )ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மூடியை அகற்றிவிட்டு கழிவுகளை சுத்தம் செய்ய தொடங்கினார்கள். மாலை வரை 5 லோடு கழிவுகள் எடுத்து சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் அந்த தொட்டிக்குள் 4 அடிவரை கழிவுகள் தேங்கி நின்றது. அவற்றை சுத்தம் செய்வதற்காக ராமு, குணா ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினார்கள். இதை மோகன சுந்தரலிங்கம் மேலே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் தொட்டிக்குள் இறங்கிய 2 பேரும் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரலிங்கம் உள்ளே இறங்கி 2 பேரையும் மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரும் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் மோகனசுந்தரலிங்கம் இறந்தார். ராமு, குணா ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் .இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..