பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல்: ஒருவர் கைது- 5 பேர் தலைமறைவு ..!

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை வினோத்குமார் வெளியே சென்று செல்போனில் பேசும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் மேலும் 6 பேரை அழைத்து வந்து வினோத்குமாரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரைத் தேடி வந்தனர். அதில் சின்னத் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.