செங்கல் லோடு தேவை எனக் கூறி லாரி உரிமையாளரிடம் பல லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட எஸ்.பியிடம் புகார்.

செங்கல் லோடு தேவை எனக் கூறி லாரி உரிமையாளரிடம் பல லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட எஸ்.பியிடம் புகார்

 

கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பணிக்காக செங்கல் லோடுகளை வாங்கி, சுமார் 100க்கு மேற்பட்டோரிடம் பண தராமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவையை சேர்ந்த கோபிநாத் என்பவர் மணல், செங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விநியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து செங்கல் லோடு தேவை என கேட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து லோடுக்கான பணம் கொடுக்காமல் அலைகழித்து ஏமாற்றி வந்துள்ளார். இதில் தடாகம் பகுதியை சேர்ந்த ஏராளமான லாரி உரிமையாளர்கள் தனித்தனியாக ஏமாற்றப்பட்ட நிலையில் இது குறித்து அவர்களுக்கு தெரிந்தவுடன், பாதிக்கப்பட்டவர்கள் பேரூர், பொள்ளாச்சி, சிங்காநல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது சாலையில் தங்களது லாரிகள் செல்லும் போது அதில் உள்ள செல்போன் எண்களை பதிவு செய்துகொண்டும், இணையத்தில் செல்போன் எண்களை சேகரித்தும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று குறைவான விலையில் செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை கொடுப்பதாக பேசிவிட்டு, எங்களுக்கு அழைத்து சுமார் 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் செங்கலை ஆடர் கொடுத்துள்ளார். இதை நம்பி நாங்கள் கோவையில் செங்கல் உற்பத்திக்கு தடை விதித்துள்ளதால், பழனிக்கு சென்று சொந்த பணத்தை கொடுத்து செங்கல் லோடுகளை ஏற்றி வந்து, பேரூர், செட்டிபாளையம், குரும்பாளையம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லோடுகளை இறக்கினோம், அதற்கான பணத்திற்காக நாங்கள் காத்திருப்போம், ஆனால் கோபி நேரில் வராமல் ஏற்கனவே பேசி வைத்துவிட்டு, எங்களுக்கு தெரியாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்வோரிடம் லோடுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு , அங்கிருந்து சென்று விடுகிறார். நீண்ட நேரம் காத்திருப்போம் ஆனால் அவர் அதற்கு செல்போனை அணைத்து விட்டு அங்கிருந்து தப்பி விடுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதே போல பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடனை வாங்கி லோடுகளை இறக்கி ஏமாற்றபட்டு தற்போது வாழ்வாதத்திற்கு வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக சுமார் 100க்கு மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.