முதல் முறையாக .. ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை.. உலக நாடுகள் நிம்மதி..

கார்த்தா: இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர்.

இந்த சந்திப்பின்போது தைவானுக்கு எதிரான சீனாவின் செயல்பாட்டுக்கு ஜோபைடன் கவலை தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தோனசியாவின் பாலி தீவில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு இன்று துவங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் ஜி20 உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலி நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தோனேசியா சென்றுள்ளனர். இந்நிலையில் தான் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல் முதலாக ஜோபைடன், ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், தைவான் விவகாரத்தில் சீனா, அமெரிக்க நாடுகள் எதிரெதிர் நிலைப்பாடுகள் கொண்டவையாக உள்ளன. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா-சீனா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் உலக நாடுகள் இந்த பேச்சுவார்த்தையை உற்று நோக்கியது.

இந்நிலையில் தான் நேற்று நடந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணிநேரம் நீடித்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலநிலை மாற்றம், உலக பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், சுகாதார பாதுகாப்புக்காகவும் இருநாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என பேசினர். தைவான், ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஜோபைடன் கவலை தெரிவித்தார். அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை இரு தலைவர்களும் கண்டித்துள்ளனர். அணு ஆயுதப் போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதை இரு தலைவர்களும் எதிர்க்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா-சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. தைவானை கைப்பற்ற சீனா முயலும் நிலையில் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் உக்ரைன் பக்கம் அமெரிக்கா உள்ள நிலையில் ரஷ்யாவுடன் சீனா இருக்கிறது. இதனால் இருநாடுகளும் சில விஷயங்களில் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. தற்போது உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இருநாடுகளின் மோதல் போக்கு என்பது இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது என்பது இருநாடுகள் இடையேயான மோதல் போக்கை சற்று தணிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தான் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.