கோவை அருகே பிரபல கொள்ளையன் கைது- 28 பவுன் நகை மீட்பு..!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி ,அப்ப நாயக்கன் பாளையம், சுப்பிரமணியம் பாளையம், கவுண்டம்பாளையம் வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம், மற்றும் பொருட்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இதை தொடர்ந்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் திலக், அரவிந்தராஜ் மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர் . இந்நிலையில் தனிப்படை போலீசார் கவுண்டம்பாளையத்தில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். இதில் அவர் அப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 30) என்பதும், பல்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை. பணம் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 28 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 11 லட்சம் இருக்கும்.கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.