கோவை பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகை பறிப்பு- இளம்பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்த சக பயணிகள்..!

கோவை தெலுங்குபாளையம் பனைமரத்தூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ஹேமலதா (வயது 40). இவர் கோவை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் நின்ற போது, ஹேமலதாவின் அருகில் நின்ற இளம்பெண் ஒருவர் திடீரென கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயற்சி செய்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ஹேமலதா சத்தம் போட்டு, சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், நகை பறித்தது சமயபுரத்தை சேர்ந்த சங்கீதா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.