அனைவரும் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் – பிரதமர் மோடி அறிவுரை..!

புதுடெல்லி: குஜராத்தின் வல்சாத் மாவட்டம், தரம்பூரை சேர்ந்த ராஜ்சந்திரா அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதன்படி தரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ்சந்திரா மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். ராஜ்சந்திரா கால்நடை மருத்துவமனை, மகளிர் திறன் மேம்பாட்டு மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

75-வது சுதந்திர தினத்தை யொட்டி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

ராஜ்சந்திரா அறக்கட்டளை போன்று அனைத்து தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். குறிப்பாக மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியா உருவாகும். பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.