ஈரோடு கிழக்குத் தொகுதி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது ..!

ஈரோடு கிழக்குத் தொகுதி.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

ஈரோடு: கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த 4-ம் தேதி இறந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த இயந்திரங்கள் தற்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று(ஜன.19) தொடங்கியது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூரில் இருந்து வந்துள்ள பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் முதல் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிட்டன. கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. தேவைப்பட்டால் இவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அறிவுரைப்படி நடந்து வருகிறோம். 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக கண்காணிப்பு நிலைக்குழு பறக்கும் படை அமைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும். தேர்தல் ஆணையம் இது குறித்து மேலும் ஆலோசனை வழங்கினால் அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவோம்’ என்றார்.