ஈரோடு இடைத்தேர்தல்: செந்தில் முருகன் போட்டி – ஓபிஎஸ் அறிவிப்பு..!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிவித்திருந்த்தநிலையில், தற்போது தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் ஓபிஎஸ் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் எனவும் கூறியுள்ளார். பாஜக வேட்பாளர் போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எந்த காலத்திலும் தடையாக இருக்கமாட்டேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது.

சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கையெழுத்து கேட்டால் போட்டு தர தயார். அதிமுக நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தான். இந்திய தேர்தல் ஆணைய ஆணவப்படி, இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக விவகாரம் குறித்து முறைப்படி தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் தனி சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார்.

தேசிய கட்சியான பாஜகவை முடிவெடுக்கும்படி நிர்பந்திக்க முடியாது. மரியாதை நிமித்தமாக பாஜகவின் முடிவுக்கு காத்திருக்கிறோம். அதிமுகவில் ஒற்றுமை இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தார். ஏற்கனவே 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்திருந்தார்.

எனவே, பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் லண்டனில் எம்பிஏ படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. உச்சநீதிமன்ற விசாரணையின்போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.