அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் அப்பீல் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை..!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும் மீண்டும் பொதுக்குழு நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், கட்சியில் ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கபட்டுவிட்டதாகவும், அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

கட்சி ஒற்றை தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டை தலைமை வேண்டும் என்ற ஒரு தனி நபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது நீதிமன்றம் ஆய்வுக்குட்பட்டது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் தனது மனுவில் கேட்காத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேநேரம், தங்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் போது, இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர்.