போல்ட் நட்டை விழுங்கிய எலக்ட்ரீசியன: லாவகமாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கோவை அரசு மருத்துவர்கள் .!

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதின் (55). எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி செய்யும் போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தெரியாமல் விழுங்கி விட்டார்.

 

இதனால் ஏற்பட்டமூச்சு திணறல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,உடனடியாக அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவர் விழுங்கிய போல்ட்நட், அவரது இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில் சிக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த நபருக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து அந்த போல்ட் நட் அகற்றப்பட்டது. தற்போது, அவர் அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக உள்ளார்.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் Dr.A.R.அலி சுல்தான் தலைமையில், DR.V.சரவணன், மயக்கவியல் மருத்துவர்கள் மணிமொழிச் செல்வன் மதனகோபாலன் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
பெரும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிந்த மருத்துவ குழுவினரை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் அ. நிர்மலா பாராட்டினார்.