துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்..!

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.இதனை முன்னிட்டு,பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும்,எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து,அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

அதே சமயம்,தற்போதைய துணைக் குடியரசுத்தலைவராகவுள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில்,துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாட்டின் துணைக் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.இதனைத் தொடர்ந்து,வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாள்.அதன் பின்னர், ஜூலை 20 ஆம் தேதி துணை குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும்,வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.