புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இன்ஜினீயரை தாக்கி கார் கண்ணாடி உடைப்பு- ஐ.டி ஊழியர் உள்பட 2 பேர் கைது..!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 25). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று இரவு புத்தாண்டு கொண்டாட தனது சகோதரர் வருண் மற்றும் நண்பர் அதீஸ்வரன் ஆகியோருடன் காரில் ஆர்.எஸ்.புரம் சென்றார்.

அங்கு அவர்கள் காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிலர் விக்ரமிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கல்லால் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விக்ரமை தாக்கினர். தடுக்க முயன்ற வருண் மற்றும் அதீஸ்வரனையும் தாக்கி மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து விக்ரம் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஸ்ரீ பிரமோத் (23) மற்றும் அவரது கோவில்மேடு வ.உ.சி நகரை சேர்ந்த கவுதம் (35) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.