தொடர் விடுமுறையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 70 பஸ்கள் இயக்கம்..!!

கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாகவும், இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை காரணமாக கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். இதையடுத்து நேற்று மாலை முதல் காந்திபுரம் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் அதிகளவிலான பயணிகள் குவிந்தனர். மேலும், பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன. குடும்பத்துடன் பலர் பஸ் நிலையத்தில் குவிந்ததால், அவர்களுக்கு போதிய பஸ்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பயணிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
மேலும் பண்டிகை காலங்களில் முன்கூட்டியே அதிகளவு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து கோவையில் இன்று முதல் கூடுதலான பஸ்கள் இயக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை சார்பில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.