குடிபோதையில் கத்தியை வைத்து தகராறு: தட்டி கேட்ட பெண்ணை கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்த உறவினர் கைது..!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை திவான்சாபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியை
சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). கூலி வேலை செய்து
வருகிறார்.

இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (22). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க
சென்றார். அப்போது தீனதயாளன் அங்கு குடிபோதையில் கையில் கத்தியை வைத்து
கொண்டு தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதனை பார்த்த மகேஸ்வரி அங்கு சென்று அவரை கண்டித்து அமைதியாக வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி
கன்னத்தில் அறைந்து தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி
கொலை மிரட்டல் விடுத்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்
பக்கத்தினர் மகேஸ்வரியை அவரிடம் இருந்து மீட்டனர். இதுகுறித்து மகேஸ்வரி ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.