குடிபோதையில் தகராறு: டாஸ்மாக் பாரை சூறையாடி சப்ளையர் மீது பீர்பாட்டில் தாக்குதல்- 7 பேர் கொண்ட கும்பல் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய 2 பேரும் மது குடிக்க வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பார் ஊழியர் சேர்மன்ராஜ்(28) கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்தனர். அவர்கள் பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி பாரில் இருந்த டேபிள் மற்றும் சேர்களை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் பார் ஊழியர் சேர்மன்ராஜை பீர்பாட்டிலால் தாக்கினர். இதனை மற்ற ஊழியர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அந்த கும்பல் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய தொழிலாளி ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார்(23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன்(31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.