ஜே.பி. நட்டாவின் சுற்றுப் பயணத்தால் பா.ஜ.க விற்கு மிகப்பெரிய விஜயம் அமையும்- அண்ணாமலை பேட்டி..!

கோவை: பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவின் சுற்றுப் பயணத்தால் பா.ஜ.க விற்கு மிகப்பெரிய விஜயம் அமையும்- மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் டவுன்ஹால் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த அவர்களுக்கு பா.ஜ.க வினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

(இந்நிகழ்வில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் வருவதற்கு காலதாமதமானதால் அவர் பங்கேற்க இயலவில்லை).

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அண்ணாமலை, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தின் காரணத்தினால் அவரது வருகை காலதாமதம் ஆனதாகவும் எனவே தாங்கள் கோவிலுக்கு வந்து தமிழக மக்கள் இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். தேசியத் தலைவர் வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக் கூட்டம் உள்ளதாகவும் கூறினார். தேசியத் தலைவர்கள் வந்தால் அ.தி.மு.க தலைமையினர் வழக்கமாக சந்திப்பார்கள் ஆனால் இம்முறை யாரும் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த அண்ணாமலை அ.தி.மு.க வை பொறுத்தவரை முன் கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருவதாகவும் பா.ஜ.க வினரின் நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார், பா.ஜ.க தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை நீலகிரியில் இருந்து துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். பா.ஜ.க எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை பா.ஜ.க வை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்.எல்.ஏ உள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருவதாகவும், அங்குள்ள அடிப்படை குறைகளை பெரும் அளவுக்கு தீர்த்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பகுதி பா.ஜ.க வை அதிக மக்கள் சார்ந்துள்ள தேசியம் மிகுந்த பகுதி என தெரிவித்த அவர் மிகப்பெரிய விஜயம் அமையும் என தெரிவித்தார்.

முன்னதாக எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் கோவில் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் 50 க்கும் மேற்பட்ட் புத்தக கடைகள், துணிக் கடைகள் அடைக்கப்பட்டன.