கோவையில் இரட்டிப்பு பண மோசடி: காருடன், போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – மூவர் கைது..!

கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜே.கே. கார்டனைச் சேர்ந்தவர் முகம்மது அனிபா (வயது 41) கூலி தொழிலாளி. இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அதுபோது அங்கு காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களிடம் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் உள்ளன. நீங்கள் ரூ 1 லட்சம் கொடுத்தால் நாங்கள் ரூ 3 லட்சம் கொடுப்போம் என்று கூறி போலி பணத்தை வீடியோவில் காட்டினார்கள்.இதில் சந்தேகம் அடைந்த முகமது அனிபா இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று காருடன் அந்த கும்பலை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை வில்லாபுரம், ராஜன் வீதியைச் சேர்ந்த சண்முக பிரசாத் (வயது 36 )குன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள நஞ்சப்பசத்திரத்தைச் சேர்ந்த கலிய வாசன் ( வயது 50) வீரபாண்டி பிரிவு, லட்சுமி நகர சேர்ந்த பிரகாஷ் ( வயது 47) என்பது தெரிய வந்தது . போலி ரூபாய் நோட்டுகளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.