அமலாக்கத்துறையை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்ய துணிச்சல் இருக்கிறதா..? மோடியிடம் உத்தவ் தாக்கரே கேள்வி..?

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைக் கட்சியிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டேயிடம் பறிகொடுத்திருக்கிறார்.

தேர்தல் கமிஷன் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுமீது வரும் 31-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்திருக்கிறது. தற்போது உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் அமராவதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “சிவசேனா என்ற பெயரை எனது தாத்தா கொடுத்தார். அதை யாரையும் திருட விட மாட்டேன்.

கட்சிகளுக்குத் தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கலாம். ஆனால், அரசியல் கட்சியின் பெயரை மாற்ற தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது. உங்களது பெயரை மாற்றினால் அதை விரும்புவீர்களா. பிரதமர் மோடிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறதென்றால், ஏன் வேறு கட்சிகளை உடைக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில் இதைச் செய்கின்றனர். நீங்கள் சிவசேனாவைத் திருடுனீர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் திருடுனீர்கள்.

நாளைக்கு வேறு ஒரு கட்சியைத் திருடுவீர்கள். நாட்டுக்குச் சொந்தமானவற்றை விற்பனை செய்வீர்கள். மற்றவர்களுக்குச் சொந்தமானதைக் கொள்ளையடிப்பீர்கள். வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்றவற்றை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்ய துணிச்சல் இருக்கிறதா. பா.ஜ.க-வை சிவசேனா தனது தோளில் சுமந்து அந்தக் கட்சியை வளர்ச்சியடையச் செய்தது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உங்களை (மோடி) குப்பைத் தொட்டியில் தூக்கியெரிந்தார்.

தற்போதைய பிரதமருக்கு ஆதரவாக பாலாசாஹேப் தாக்கரே நிற்கவில்லையெனில் இன்றைக்குப் பிரதமராக இருக்க முடியுமா… அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ.க எதையும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம்தான் இது தொடர்பாக முடிவுசெய்தது.

பா.ஜ.க கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் போலியானவை. இது குறித்து சிவசேனா தொண்டர்கள் மக்களிடம் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும். சிலர் நான் ஓட்டுப் பிச்சை கேட்டு வந்திருப்பதாகக் கூறுகின்றனர். வாக்காளர்கள்தான் மன்னர்கள். அவர்களிடம் ஓட்டு கேட்கத்தான் வந்தேன். வாக்காளர்களை அடிமைகளாகக் கருதவில்லை” என்று தெரிவித்தார்.