தீபாவளியால் ஆடு விற்பனை படு ஜோர்… பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை விற்பனை..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. குறைவான அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை கூடியது. புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதாலும், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை வருவதாலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆட்டுச்சந்தைக்கு வழக்கத்தை விட சற்று அதிகமாக ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
ஆடுகளை வாங்குவதற்காக திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் சந்தையில் ஆடுகளை வாங்கிசென்றனர். இதனால் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஆட்டுசந்தையில் அதிகபட்சமாக 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது. பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட அதிகமாக ஆடுகள் வந்திருந்தன. 800 முதல் 1000 ஆடுகள் வரை சந்தைக்கு வந்தது. 5 கிலோ முதல் 30 கிலோ வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாது.