கோவையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஆன நிலையில் விநியோகம்: கண்காணிப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!!

கோவை மாவட்டத்தில் கடந்த 28 ந் தேதி காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆனநிலையிலும், உடைந்த, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பால் டப்புகளிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவுஆகி பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் நிலையத்தில் ஆவின் கண்காணிப்பு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.