நடுக்கடலில் தொழில் போட்டியில் தகராறு : மீனவ படகுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – 37 பேர் மீது வழக்கு..!

ன்னியாகுமரி அருகே நடுக்கடலில் வைத்து இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசியது தொடர்பாக 37 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 5 விசைப்படகுகள், இழுவலைகள் மூலம் இடிந்தரைக் கடற்கரையிலிருந்து, சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் நாட்டுப் படகு மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இடிந்தகரையைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிலர் கடலுக்குள் சென்று, அவர்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் கடற்கரையை ஒட்டி மீன் பிடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் செல்லாததினால், இடிந்த கரையைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள், சுமார் 12 வள்ளங்களில் (சிறிய படகுகள்) சென்று அவர்களை விரட்டி உள்ளனர். அப்போது அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு ஓட்டுநர் கிறிஸ்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், கன்னியாகுமரி கடலோர காவல்துறையினர் இடிந்த கரையைச் சேர்ந்த ஜெனிஃபர், வளன், ராயப்பர், சைல்ஸ் ஆனந்த், சிபி மற்றும் பீட்டர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.