விளம்பரங்கள் அனுமதிப்பதில் பாரபட்சம் – தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு.!!

சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.

தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கோரிய திமுகவின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், “சாதாரண கருத்துக்களை கூறி விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மேலும், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதற்கு 6 நாட்கள் வரை தாமதம் ஆகிறது.

விளம்பரத்துக்கு அனுமதி தராதது தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. திமுகவின் மனு மீது இரண்டு நாட்களில் பரிசீலித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும் திமுகவின் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளை மறுநாள் (ஏப்.15) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.