டெட்டனேட்டர்கள் பறிமுதல் வழக்கு – மேலும் 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை..!

கோவை மாவட்டம் காரமடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் நின்றிருந்தனர். மேலும் அவர்கள் கையில் பை ஒன்று இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததோடு, கைப்பையையும் சோதனை செய்தனர். இதில் 26 கட்டுகள் கொண்ட மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ் (23), ஆனந்த் (25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (41), திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பதும், இவர்கள் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை காரமடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் பழைய கட்டிடங்களை தகர்த்து கொடுக்கும் வேலை ெசய்து வந்தனர். ரங்கராஜ் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு வெடி பொருளை எவ்வித உரிமமும் இல்லாமல் பயன்படுத்தி வந்ததும், பயன்படுத்தியது போக மீதமுள்ள எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமார், செந்தில்குமார், தினேஷ், ஆனந்த், ரங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து ரங்கராஜிடம் எங்கிருந்து டெட்டனேட்டர்கள் வாங்கினீர்கள்? யார் வாங்கி தந்தார்கள்? என விசாரித்தனர். விசாரணையில், இந்த வெடிபொருட்களை சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால், காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு இடத்தில் இருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள், 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் போலீசார் மொத்தம் 1,244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 622 ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் சதிவேலை செய்யும் கும்பல்களுக்கு ஏதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? கேரளாவில் பயங்கர வாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனரா? என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.