பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின் மகள் இருந்தும், அரசியல் வாரிசாக மகனைத் தான் தேர்வு செய்துள்ளார் – வானதி சீனிவாசன் சாடல்.!

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மே 7-ம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘திராவிடம் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதியாக்கிய கொள்கை.

ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு. அதனால்தான் திராவிடத்தைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். தமிழகத்தின் திராவிட மாடலை, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்ப்போம்’ எனக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்துக்கு வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதே திமுக-வின் திராவிட இனவாதம். திராவிடம் என்ற ‘நிலப்பரப்பை’, திராவிட ‘இனமாக’ கற்பனையாகச் சித்திரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான் திராவிடத்தின் அடிப்படை.

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக, 1916-ல் சென்னை மாகாணத்தில், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ உருவானது. இதுவே பின்னாளில் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகி, திமுக-வானது. நீதிக்கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப்போனது.

அண்ணா மறைவுக்குப் பிறகு அரை நூற்றாண்டுக்காலம் திமுக தலைவராகவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முதலமைச்சராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது மறைவுக்குப் பிறகு, மகன் ஸ்டாலின் முதல்வராகவும், திமுக தலைவராகவும் இருக்கிறார். மகன் உதயநிதியை அமைச்சராக்கி, திமுக-வின் அடுத்த வாரிசையும் தயார்படுத்திவிட்டனர். `உதயநிதியின் மகன் இன்பநிதியையும் ஏற்போம்’ என மூத்த அமைச்சர்களே பேசத் தொடங்கிவிட்டனர். கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்திலிருந்து மட்டுமே வர முடியும் என்பதுதான் திமுக மாடல்.

ஜனநாயகத்துக்கு எதிரான, சமத்துவத்துக்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான இந்த திராவிட மாடல் யாருக்கும் தேவையில்லை. பாஜக-வின் அடுத்த தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. கடைக்கோடி கிராமத்திலுள்ள தொண்டர்கூட பாஜக-வில் தலைவராக, பிரதமராக, முதலமைச்சர்களாக வந்துவிட முடியும். ஆனால், அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் யார் என்பதை இப்போதே கூறிவிட முடியும். இதுதான் திராவிட மாடல்.

பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின் மகள் இருந்தும், தனது அரசியல் வாரிசாக மகன் உதயநிதியைத்தான் தேர்வு செய்திருக்கிறார். வாரிசு அரசியலில்கூட ஆணாதிக்கம்தான். இதுதான் திராவிட மாடல். சமத்துவம், சமூகநீதி பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசாத கூட்டமே இல்லை. ஆனால், திமுக கட்சியிலும், ஆட்சியிலும் தமிழகத்தில் 20% அதிகமாக இருக்கும் பட்டியலினத்தவர்களுக்கு எந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியும் இல்லை.

இருப்பதிலேயே உச்சபட்ச அதிகாரம் என்றால், அது அரசியல் அதிகாரம்தான். அரசியல் அதிகாரம் கிடைத்தால் ஒரு சமூகம் தனக்குத் தேவையானதைத் தானே எடுத்துக் கொள்ள முடியும்.

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர்களாக, உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சராகும்போது அவர்களுக்குத் தேவையானதை அவர்களே செய்துகொள்ள முடியும். ஆனால் திமுக எப்போதுமே அவர்களை, கொடுக்கும் இடத்தில் வைக்காமல், வாங்கும் இடத்திலேயே வைத்திருக்கிறது. எப்போது பார்த்தாலும் நாங்கள் பட்டியலினத்தவர்களுக்கு அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியலிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில், அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும்.

அதுதான் உண்மையான சமூகநீதி. திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த அமைச்சரவை மாற்றத்திலாவது பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், உள்துறை, நிதி, பொதுப்பணி தொழில் ஆகிய முக்கிய துறைகளில் ஒன்றையும் வழங்குவார் என்று நான் நம்புகிறேன். பல்லாவரத்தில் பேசிய சமூகநீதியை அவர் செயலில் காட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.