டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைப்பு..!

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 26-ம் தேதி, 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது.

நீதிமன்ற அனுமதியுடன், சிபிஐ காவலில் இவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ காவல் முடிவடைந்ததால் சிசோடியா நேற்று பிற்பகலில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை மார்ச் 20 வரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், 2 ஜோடி மூக்கு கண்ணாடி, ஒரு டைரி, பேனா, பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை சிசோடியாவுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியான வசதி கொண்ட அறையில் அடைக்க வேண்டும் என்ற சிசோடியாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரத்தில், சிபிஐயால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சிசோடியா, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது. சிசோடியாவின் ஜாமீன் மனு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. கேட்ட கேள்விகளையே சிபிஐ மீண்டும் மீண்டும் கேட்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ஜாமீன் மனுவில் அவர் கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆம் ஆத்மி அரசு, இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளது.