மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நடக்கும் மரணம் குறித்து சர்ச்சை வீடியோ… நடிகர் பாக்கியராஜ் மீது போலீசில் புகார்.!!

கோவை : நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் .அதில் கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் பதுங்கி இருக்கும் சிலர் காலை பிடித்து இழுத்துச் சென்று மூழ்கடித்து கொலை செய்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நடத்தப்படும் திட்டமிட்ட செயல் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நடிகர் பாக்யராஜ் புகார் ஆதாரமற்றது. இது போன்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்க செயலாளர் யு.மஸ்தான் மேட்டுப்பாளையம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம் .அப்படி குளிக்கும் போது ஒரு சிலர் ஆழமான பகுதிக்கு சென்று விடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது .நடிகர் பாக்கியராஜ் குறிப்பிட்டது போல திட்டமிட்டு சம்பவம் நடந்ததாக போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை .அவர் குறிப்பிட்டது போல அந்த ஆற்றில் அப்படி செய்யவும் முடியாது. அவரின் கருத்து மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மீது பிறருக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் மகளிர் சிலர் பிரேதத்தை கண்டறிந்து தரும் காசுக்காக கொலை செய்கிறார்கள் என்றும் அவதூறு பரப்புவதாகவும் இருக்கிறது .இந்த பகுதியில் தற்செயலாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பவானி ஆற்றில் நடைபெறும் பல்வேறு மீட்பு பணிகளில் அந்த பகுதி மக்கள் அரசு உதவியாக இருக்கிறார்கள். இனி அவர்களை இது போன்ற பணிகளில் ஈடுபடாதவாறு தடுக்கும் வகையில் நடிகர் பாக்யராஜ் பேச்சு இருக்கிறது. எனவே வதந்தியை பரப்பிய நடிகர் பாக்கியராஜ் மீது உரிய நடக்க எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது..