கோவையில் தொடர் கஞ்சா விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது..!

கோவையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் காசிராஜன் (35), மற்றும் பரமன் என்பவரது மகன் முருகசாமி (32). ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இந்த இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், எச்சரிக்கை விடுத்தும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிராஜன், மற்றும் முருகசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இதே போல் எச்சரிக்கையை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.