கட்டப் பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐஜி-யிடம் புகார் மனு..!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் என்பவரின் மகன் சாமியப்பன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கடந்த பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். வீட்டின் அருகில் வசித்து வரும் சேதுராமன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தொழில் செய்யவிடாமல் பணம் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி வருகிறார்.
சேதுராமன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல தொழிலதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதை ஒரு தொழிலாக செய்து வருகிறார். எங்களது ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர்களிடம் எங்கள் நிறுவனத்தை பற்றி தவறாக கூறி தொழிலை முடக்கி வருகிறார். மேலும் சேதுராமனின் உறவினர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டருக்கு உதவியாளராக பணிபுரிந்து வரும் ஈஸ்வரன் என்றும் அவரது பெயரைச் சொல்லி எங்களை மிரட்டி வருகிறார்.
20 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அனுமதிப்பேன் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார். மேலும் இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். மேலும் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் என்னை மிரட்டி செல்கிறார்கள்.எனவே சேதுராமன் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.