மருத்துவக் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல்- வாலிபர் மீது புகார்..!

கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மகள் ஜெனிபர் ( வயது 21 )இவர் சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரிடம் 3 ஆண்டுகளாக காதல் வைத்திருந்தார்.இந்த நிலையில் அருண் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவருடன் பேசுவதை ஜெனிபர் நிறுத்திவிட்டார். தன்னிடம் பேசுமாறு அருண் அடிக்கடி அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்து வந்தார்.இந்த நிலையில் நேற்று ஜெனிபர் கல்லூரி முடிந்து தனது தோழிகளுடன் கணபதி சத்தி ரோட்டில் கல்லூரி பஸ்சை விட்டு இறங்கி நடந்து சென்றார்.அப்போது தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த அருண் மாணவி ஜெனிபரை வழிமறித்து தன்னிடம் பழகுமாறு வற்புறுத்தினார்.அதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி, நீ என்னை காதலிக்காவிட்டால் உன்னையும் ,உன்  பெற்றோர்களையும் குத்தி கொலை செய்துவிடுவேன் என்றும் கூறிவிட்டு தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து ஜெனிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் ஆகியோர் அருண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,கொலை மிரட்டல், உள்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.