திமுக மீது புகார்… இன்று ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக சார்பில் பேரணி..!

சென்னை: திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று கிண்டியில் பேரணி நடைபெறுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்்ளச் சாராயத்தால் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, திமுக ஆட்சி தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெறுகிறது.

அதன்படி, வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அனைவரும் குழுமி, அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். இந்த பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.